இராஜ. தியாகராஜன் - மின்னஞ்சல்: tyagu@pudhucherry.com
அயல்நாட்டார் வருகையில் புதுச்சேரி
(Pondicherry under the Foreigners and invations)
நன்றி -
"புதுச்சேரி மாநில விடுதலைப் போராட்ட வரலாறு"
பள்ளிக் கல்வித் துறை
புதுச்சேரி அரசுஅயல்நாட்டார் வருகையும் பிரஞ்சியர் ஆதிக்கமும்
16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் (ஹாலந்து நாட்டினர்), பிரஞ்சுக்காரர்கள் என பலவகையான ஐரோப்பியர்கள் புதுச்சேரியில் தம்முடைய வணிக வளாகத்தினை நிறுவி, அடுத்தடுத்து இப்பகுதியை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். கி.பி 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் போர்ச்சுக்கீசியர் தமது வணிக வளாகத்தை புதுவையில் அமைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆயிரத்து ஐநூற்று ஐம்பத்து மூன்ற்றாம் ஆண்டில் பரோஸ் (Barros) என்னும் போர்ச்சுக்கீசிய வரலாற்று ஆசிரியர் தம் நூலில் சோழமண்டல வணிகத்தளங்களாக நாகூர், திருமலைராயன்பட்டினம், திருமுல்லைவாயில், கொள்ளிடம், புதுச்சேரி, காலாப்பட்டு, கூனிமேடு, சதுரங்கப் பட்டினம், மைலாப்பூர் என்பதாகக் குறிப்பிடுகிறார். இவர்களுக்குப் பின் டச்சுக்காரர்கள் கி.பி.1616 இல் வணிக நிமித்தம் புதுவை வந்ததாகத் தெரிகிறது. ஆனால் நிலையாக தங்கியதாக சான்றுகள் இல்லை. இவர்களையடுத்துப் புதுவைக்கு வந்தவர்கள் டேனிஷ்காரர்கள். கி.பி.1639 ஆம் ஆண்டளவில் வணிக வளாகம் அமைத்ததாக ஆங்கிலேய ஆய்வாளர் பிரான்சிஸ் டே (Francis Day) என்பவரின் குறிப்புகளிலிருந்து அறியமுடிகிறது. கி.பி. 1648 இல் பீஜப்பூர் படைகள் செஞ்சியைக் கைப்பற்றியதை அடுத்து டேனிஷ்காரர்கள் புதுவையை விட்டு வெளியேறினார்கள். பின்பு கி.பி. 1656 அளவில் இராமவேல் கிருஷ்ணப்ப நாயக்கரின் அழைப்பில் டச்சுக்காரர்கள் மீண்டும் வணிகம் செய்தார்கள்.
புதுச்சேரிக்குப் பிரஞ்சியர்கள் வருகை:
கி.பி. 1670 இல் ழான் பெப்பேன் (jean pepein) என்ற கப்பல் தலைவர் தலைமையில் ஒரு வணிகக் குழு புதுச்சேரியில் வணிக வளாகம் அமைக்க ஆய்வு செய்து பிரான்சுக்கு ஒரு சிறப்பறிக்கை அனுப்பியது. கி.பி. ஆயிரத்து அறுநூற்று எழுபத்து மூன்று, பிப்ரவரி 4ம் நாள், தெலாஹே (Dela Haye) என்ற கப்பல் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெலான்ழே தெ லெஸ்ப்பினேவும் (Dellenger de l Espenay) காவல்தலைவரும் புதுச்சேரியில் வந்திறங்கினர். இந்நாளே புதுச்சேரியின் வரலாற்றில் பிரஞ்சியர் ஆட்சி தொடக்கமாக அமைந்தது. அதன்பிறகு கி.பி.1675க்கு பின்னர் புதுச்சேரி பலவகையிலும் பிரஞ்சியர்களின் முக்கிய வணிகத் தலமாக மாறத் துவங்கியது. கி.பி. 1686 முதல்1706 வரை பிரான்சுவா மர்த்தேன் (Francois Martin) இயக்குநர் தலைவராகப் புதுச்சேரியில் தங்கியிருந்தார்.
இப்படியாக புதுச்சேரியில் பிரஞ்சியர்கள் ஆழ வேறூன்றினர். 1703ஆம் ஆண்டளவில் 700 யூரோப்பியர்கள், 30000 இந்தியர்கள் கொண்ட பிரஞ்சுக் குடியிருப்பு நகரமாக விரிவடைந்தது. புதுச்சேரியில் பெவாலியர் தெகூர்ஷான் (Beauvallior de courchant) என்ற ஆளுனர் காலத்தில் அடிமை வணிகமும் நடந்ததற்கான விவரங்களும் கிடைக்கின்றன. ஆளுனர் லெனுவாவின் (Lenoir)கட்டுப்பாட்டிலிருக்கும் போது பிரஞ்சியரின் நிர்வாகப் பகுதிக்குட்பட்ட, மய்யழி (Mahini) என்பதே பிரஞ்சியரின் மாகே என்றாயிற்று. இதுபோலவே 1731ஆம் ஆண்டளவில் ஏனாமும், அடுத்த ஆளுனரான துய்மா (Benoit Duima) காலத்தில் முதன்முதலாக காரைக்கால் பகுதியில் பிரஞ்சியரின் வணிக வளாகமும் உருவாக்கப்பட்டு 1739 பிப்ரவரி, 14இல் பிரஞ்சியர் ஆளுகைக்குட்பட்டது.
ஆளுநர் துய்மாவிற்கு அடுத்தபடியாக புதிய ஆளுராக பொறுப்பேற்ற ழோசேப் பிரான்சுவா துய்ப்ளே (Joseph Francois Duplex) என்பவரின் காலத்தில் தான் புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆட்சி வலுவாக வேறூன்றியது. பிரஞ்சிந்திய வரலாற்றில் தன்னிகரற்ற தலைவராக திகழ்ந்த இவர் தனது அரசியல் திறமையாலும், பேராற்றலினாலும், பிரஞ்சுப் பகுதிகளை இந்தியாவில் மிகவும் வலுவுள்ளதாக்கினார். மற்ற ஆளுனர்களைப் போலல்லாது, இந்தியாவின் உள்நாட்டுச் சண்டைகளில் தலையிட்டு பிரஞ்சு ஆதிக்கத்தினை நிலை நிறுத்த முயன்றார். ஆங்கிலேயர்களும் இதே உத்தியைப் பின்பற்றியதால், இருவருக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்தன. 1750இல் அம்பத்தூர் வெற்றிக்காக முசபர் ஜங் வில்லியனூர், பாகூர் சார்ந்த முப்பத்தாறு ஊர்களை பிரஞ்சியருக்கு வழங்கினார். தக்காண சுபேதார் சலபத் சிங் வழுதாவூர் முதலான நூறு கிராமங்களை வழங்கினார். 1749 ஆண்டளவில் எண்பத்தோரு கிராமங்கள் அடங்கிய காரைக்கால் ஒட்டிய நான்கு மாகாணங்களும் அப்பொதைய தஞ்சை மன்னனான தவுஸ்த்கானிடமிருந்து துய்ப்ளேவால் வாங்கப்பட்டன. துய்ப்ளேவிடம் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த ஆனந்த ரங்கபிள்ளை எழுதிய பனிரெண்டு தொகுதிகளான தினப்படி நாட்குறிப்புகள் அக்கால வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன.
இதன் பின்னர் இந்தியாவிலும், யூரோப்பாவிலும் ஏற்பட்ட பல மோதல்களுக்குப் பின், புதுச்சேரியில் ஒப்பந்தங்கள் கையெழுதிடப்பட்டு, ஆங்கிலேயர்களுக்கும், பிரஞ்சியர்களுக்கும் மோதல்கள் முடிவுக்கு வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பல ஆளுனர்கள் புதுச்சேரிக்கு வந்து போயினர். பொறுப்பிலோ, மக்கள் வாழ்க்கை முறையிலோ குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏதும் ஏற்படவில்லை.
-:o:O:o:-